கரோனா: பள்ளிகளில் சோப் கட்டாயம்; புதுச்சேரியில் உத்தரவு

கரோனா: பள்ளிகளில் சோப் கட்டாயம்; புதுச்சேரியில் உத்தரவு
Updated on
1 min read

கரோனா வைரஸ் எதிரொலியாக பள்ளிகளில் சோப் போட்டுக் கட்டாயமாகக் கை கழுவ வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

''பள்ளி தொடங்கிய முதல் பாடவேளையில் கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை தினமும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததை தினமும் ஒரு மாணவர் வீதம் அதனைத் திரும்பச் செய்து காட்ட வேண்டும்.

பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட விழாக்களை மறு உத்தரவு வரும் வரை நடத்தக் கூடாது. கரோனா விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். 'வாட்டர் பெல்' அடிக்கும்போது மாணவர்கள் தண்ணீர் குடிப்பது மட்டுமல்லாமல் கட்டாயமாகக் கைகளைக் கழுவ வேண்டும். இதற்குத் தேவையான சோப்புகளை பள்ளியில் வாங்கி வைக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்குப் பொது நிதியில் இருந்து சோப்புகளை வாங்கலாம்.

காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களையோ, ஆசிரியரையோ உடனடியான அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதில் பாதிப்பு இருந்தால் அந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in