Published : 14 Mar 2020 01:41 PM
Last Updated : 14 Mar 2020 01:41 PM

விடுப்பு நிறுத்திவைப்பால் குழப்பம்: கரோனாவில் இருந்து காக்க 8-ம் வகுப்பு வரை விடுமுறை- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

விடுப்பு நிறுத்திவைப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், கரோனாவில் இருந்து பாதுகாக்க மழலையர் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கவேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சீன நாட்டில் தொடங்கி இத்தாலி, ஈரான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் 83 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பில்லையென்றாலும், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு பரவலாகி வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் நலன் கருதி 10 மற்றும் 12-ம் வகுப்பினைத் தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை ரத்து செய்து விடுமுறை அளிக்க ஆவன செய்ய வேண்டும். இதற்கிடையே வருமுன் காத்திடும் நோக்கில் மழலையர் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்தும் கேரளாவை ஒட்டியுள்ள ஏழு மாவட்டங்களுக்கு மட்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு குறித்து குழந்தைகளிடம் சொன்னாலும் பின்பற்றுவது இயலாத காரியமாக உள்ளது.

கரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதால் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் குழந்தைகளின் உடல் நலன் கருதி மாநிலம் முழுவதும் ப்ரீகேஜி முதல் 8-ம் வகுப்பு வரை மார்ச் 31-ம் தேதி முடிய விடுமுறை வழங்க வேண்டும்'' என்று பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x