Published : 13 Mar 2020 11:22 AM
Last Updated : 13 Mar 2020 11:22 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார் சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ. விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியை முத்துமாரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கோ. ஜெயக்குமார் ஞானராஜ் கருத்துரையாற்றினா்.
வட்டாரக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி பேசியதாவது: ஸ்டார் சேமிப்புத் திட்டத்தின்படி, இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ- மாணவியருக்கும் உண்டியல்கள் வழங்கப்பட்டு, அவரவர் பெயர் குறிப்பிடப்பட்டு பள்ளியில் வைக்கப்படும்.
பள்ளியில் நன்கு படிக்கும் மாணவர்கள் பெறும் ஒவ்வொரு ஸ்டாருக்கும், ஒரு ரூபாய் வீதம் அந்த மாணவரிடம் தலைமை ஆசிரியர், தனது சொந்த செலவில் வழங்குவார். மாணவர் அந்தப் பணத்தை தனது உண்டியலில் சேமித்துவர வேண்டும்.
இந்த ஸ்டார் அனைத்துப் பாடங்களுக்கும் வழங்கப்படும். கற்றல் விளைவுகள் மதிப்பீடு, தொகுத்தறி, தொடர் மதிப்பீடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதை எழுதுதல், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருதல், விளையாட்டில் முதன்மை, ஓவியம், பொது அறிவு வினாடி-வினா, படைப்பாற்றல், நல்லொழுக்கம், ஆங்கிலப் பேச்சுத் திறன், சிறப்புத் திறமைகள், நன்னெறி புகட்டும் செய்யுள் பகுதிகளைப் பொருளுடன் ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு ஸ்டார் வழங்கப்படும் என்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கா. மாரீஸ்வரி, துணைத் தலைவர் கா.மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ. காளீஸ்வரி மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT