Published : 12 Mar 2020 03:14 PM
Last Updated : 12 Mar 2020 03:14 PM

ஜூன் 2020 வரை மின்னணுக் கல்வி முறை: ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்

கரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னேற்பாடாக ஜூன் 2020 வரை மின்னணுக் கல்வி முறையை அமல்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டு வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்றால் ஏராளமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன அல்லது வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்து வருகின்றன.

கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால், பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் டெல்லி, கேரளா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அதேபோல ஹாங்காங், இத்தாலி, ஐக்கிய அரபு நாடுகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சவுதி அரேபியா, தனது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கட்கிழமையில் இருந்து விடுமுறை அளித்தது. அனைத்துவிதமான அரசு, தனியார் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்குக் காலவரையற்ற விடுமுறை அளித்து, அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரக கல்வித் துறை அமைச்சகம் மின்னணுக் கல்வி முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்னணுக் கல்வி முறை இந்தக் கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜூன் 2020 இறுதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது அனைத்து விதமான பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். கல்வி நிலையங்களில் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தொலைதூரக் கல்வி முறைக்கான சிறப்புத் தேவைகள் என்னென்ன என்பது குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென பல்வேறு துறைகளில் இருந்து கல்வி மற்றும் நிர்வாக உயர் அதிகாரிகள் கொண்ட விரிவான குழுவை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x