Published : 11 Mar 2020 03:59 PM
Last Updated : 11 Mar 2020 03:59 PM
ஆந்திர அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள 15,715 அரசுப் பள்ளிகளை நவீன மயமாக்க, ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன.
முன்னதாக, ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்நிலையில் பள்ளிக் கட்டமைப்புப் பணிகளை இந்தக் கல்வியாண்டின் ஜூன் மாதம் தொடங்குவதற்குள் முடிக்கும்படி ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல ஜெகனண்ணா கொருமுட்டா மதிய உணவுத் திட்டம் சார்ந்த வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜெகனண்ணா வித்யா கணுகா திட்டத்தின் கீழ் இலவசமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 3 சீருடைகள், பெல்ட், புத்தகப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் ஆகியவை முதல்வரிடம் காண்பிக்கப்பட்டன.
கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், போதிய தண்ணீர் வசதி இல்லாத பள்ளிகளில் தண்ணீர்த் தொட்டி வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT