Published : 09 Mar 2020 01:40 PM
Last Updated : 09 Mar 2020 01:40 PM

கரோனா முன்னெச்சரிக்கை: தமிழகப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தம்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக, தமிழகப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கோவிட்-19 காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 40 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு செய்து வருகிறது.

முன்னதாக நோய் பரவும் முறை, கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அடிக்கடி கை கழுவுதல், இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக் கொள்ளுதல், ஒருமுறை பயன்படுத்தும் காகிதத்தை உபயோகப்படுத்துதல், உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் பள்ளிக்கு வராமல் இருப்பது, பொது இடத்தில் கூடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை மார்ச் 31-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக டெல்லி பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x