Published : 05 Mar 2020 04:01 PM
Last Updated : 05 Mar 2020 04:01 PM

கரோனா வைரஸ்: மாணவர்கள் மாஸ்க் அணிந்து தேர்வெழுத சிபிஎஸ்இ அனுமதி

சிபிஎஸ்இ தனது மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் (கை சுத்திகரிப்பான்) கொண்டு வந்து தேர்வெழுத அனுமதித்துள்ளது.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3200 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவிய நிலையில், இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் மேலும் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தனது மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர்களைக் கொண்டு வர அனுமதித்துள்ளது. பள்ளிகளும் இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 30 வரை நடக்கின்றன.

இந்நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அடிக்கடி கை கழுவுவது, தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது, உடல்நிலை சரியில்லாத போது பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொள்வது, பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்ப்பது போன்றவை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதன்மூலம் இந்த மாணவர்கள் தங்களின் குடும்பங்களுக்கும் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x