Published : 03 Mar 2020 08:27 PM
Last Updated : 03 Mar 2020 08:27 PM
மதுரை காமராசர் பல்கலைக்கழக, தொடர்பியல் துறை பேராசிரியர், துறைத் தலைவர் சு நாகரத்தினம் என்பவருக்கு 2019-ம் ஆண்டுக்கான அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்திய விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிபுணர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய அறிவியல் தின விழாவில் இந்திய அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சகத்தால் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக, தொடர்பியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் சு நாகரத்தினத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
டெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்விருதினை வழங்கினார்.
விருதுடன், பாராட்டுச் சான்றிதழ், ரூ.2 லட்சத்துக்கான பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பேராசிரியரை துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் உட்பட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பாராட்டினர்.
விருது குறித்து இந்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ சூழல் இடங்களை ஓர் ஊடகமாகக் கருதி புதுமை, பாரம்பரிய நுட்பங்கள் வழியாக அறிவியல் தொழில் நுட்பத்தை பொதுமக்களிடம் இணைத்திருக்கிறார். ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மற்றும் சூழல் தலங்களுக்குப் பின்னணியிலுள்ள அறிவியல் தொழில்நுட்ப தகவல்களை பரவலாக்கியுள்ளார். இது போன்ற முயற்சியில் அவர் இந்திய அளவில் நிபுணர்கள், குழுவினர், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துள்ளார். பல துறைகள் சார்ந்த கருத்துக்களை மக்கள் குழுவினர் மத்தியில் சேர்த்துள்ளார் என்பதற்காக விருது அளிக்கப்பட்டுள்ளது,’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT