Published : 02 Mar 2020 03:10 PM
Last Updated : 02 Mar 2020 03:10 PM
பெண்கள் தினத்தன்று அரசுப் பள்ளிகளில் சிறுமிகளே வகுப்புத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களே வகுப்புத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வது என்ற தலைப்பில் இந்த ஆண்டு பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில், பெண் சாதனையாளர்களின் சாதனையை மையமாகக் கொண்டு செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக அறிவியல் வகுப்பின்போது பெண் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு, அறிவியல் வகுப்பில் பெண் அறிவியலாளர்களின் சாதனைகள், மொழிப் பாட வகுப்பில் பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக நாடகங்கள், குழுப் பாடல்கள், விளையாட்டு ஆகியவற்றையும் பள்ளிகள் மேற்கொள்ளலாம். தொழில்முறை சாதனைப் பெண்கள் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.
பெண்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால், மார்ச் 1 முதல் 7 வரை எப்போது வேண்டுமானாலும் நிகழ்வுகளை நடத்தலாம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT