Published : 28 Feb 2020 08:24 AM
Last Updated : 28 Feb 2020 08:24 AM

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறும் அரசு பள்ளி மாணவர்களை கவுரவிக்க சொந்த பணத்தில் ரூ.1 லட்சம் அளித்த ஆட்சியர்

அன்புச்செல்வன்

தஞ்சாவூர்

பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களை கவுரவிக்க, அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், கடலூர் மாவட்ட ஆட்சியருமான அன்புச்செல்வன், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை பள்ளியின் பெயரில் வங்கியில் நிரந்தரவைப்புத் தொகையாக செலுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பைஅரசு மேல்நிலைப்பள்ளியில், 900-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மேலும், பள்ளிதலைமையாசிரியர் மனோகரன், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். இதற்காக செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், கடலூர் மாவட்ட ஆட்சியருமான அன்புச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர், தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை பள்ளியின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளதாகவும், அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களை கவுரவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அரசு பள்ளிமாணவர்களை கவுரவிக்க ரூ.1லட்சம் அளித்த ஆட்சியர் அன்புச்செல்வனுக்கு ஆசிரியர்கள், நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x