Published : 28 Feb 2020 08:11 AM
Last Updated : 28 Feb 2020 08:11 AM

சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்ட நாள் தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விழா

புதுடெல்லி

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியரான சர் சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்த நாளில்தான் அவர் சாதித்த துறை குறித்து விழா கொண்டாடப்படும். ஆனால், சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாளான பிப்ரவரி 28-ம் தேதியை நாம்தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம். அப்படி என்றால், அவர் கண்டுபிடித்தது எவ்வளவு பெரிய சாதனை என்று கற்பனை செய்து பாருங்கள் மாணவர்களே.

ராமன் விளைவு என்று பரவலாகஅறியப்படும் அவர் கண்டுபிடிப்புதான் என்ன?

ஐரோப்பாவில் 1928-ம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சி.வி.ராமன்கப்பல் பயணம் மேற்கொண்டார். மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டுஇருந்தபோது, கப்பலின் திறந்தவெளி தளத்தில், ராமன் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். இதற்கிடையே, ஆகாயத்தை பார்த்த ராமனுக்கு ஒரு வித்தியாச மான உணர்வு ஏற்பட்டது.

மத்திய தரைக் கடல் பகுதியின் வானம், ஏன் அடர்த்தியான நீல நிறமாககாட்சி அளிக்கிறது என்று சிந்திக்க தொடங்கினார். அப்போது, அவருக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், அந்த சந்தேகம் மனதில் ஆழப்பதிந்தது. ஐரோப்பா பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியராமன், வானத்தின் நிறம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவாக ஒளி ஊடுருவக் கூடிய ஊடகம் திடப் பொருளாகவோ, திரவப் பொருளாகவோ அல்லதுவாயுப் பொருளாகவோ இருக்கலாம்.அந்த ஊடகங்களில் ஒளி செல்லும் போது அதன் இயல்பில் ஏற்படும்மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ (molecular scattering light ) ஏற்படுகிறது என்ற வரலாற்று உண்மையைக் கண்டறிந்தார். இந்த சிறப்பான ஆய்வுக்குதான் அவருக்கு 1930-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியை (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியை பல்வேறுஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்' தோன்றுவதை அவர் கண்டார். நாம் வானவில் காண்கிறோம் அல்லவா. அது எப்படி உருவாகிறது என்பதையும் ராமன்தான் கண்டுபிடித்தார்.

இதனை பின் நாளில் ‘ராமன் வரிகள்'என்றும், அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect)என்றும் அழைக்கப்படத் தொடங்கியது.நோபல் பரிசு மட்டுமல்ல மாணவர்களே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, இவருக்கு லண்டனில்உள்ள ராயல் சொசைட்டியின் ‘ஃபெல்லோஷிப்’ (1924), பிரிட்டிஷ் அரசால் இவருக்கு நைட் ஹூட் பட்டம், சர் பட்டம் அளிக்கப்பட்டது (1929).

அதேபோல், இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான ‘மேட்யூச்சி’, மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம் (1935), பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் (1941), இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது ( 1954) அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. அகில உலக லெனின் பரிசு (1957) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பதக்கங்களையும், விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

சந்திரசேகர வெங்கட ராமன் என்ற இயற்பெயர் கொண்ட சர்.சி.வி.ராமன், 1888-ம் ஆண்டு நவம்பர்7-ம் தேதி திருச்சியை அடுத்த திருவானைக்காவல் எனும் கிராமத்தில் பிறந்தார்.

தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு, 1986-ம் ஆண்டு இந்த தினத்தை அறிவித்தது.இந்த ஆண்டுக்கான அறிவியல் தினம் ‘அறிவியலில் பெண்கள்’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இன்று விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அறிவியல் விழா நடைபெறுகிறது. இதில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x