Published : 26 Feb 2020 05:37 PM
Last Updated : 26 Feb 2020 05:37 PM
அரசுப் பள்ளிக் குழந்தைகளின் திறனை வெளிப்படுத்த சங்கமம் நிகழ்ச்சி முதல்முறையாக புதுச்சேரி அரசுப் பள்ளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் சங்கமம் நிகழ்வு இன்று (பிப்.26) காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது. திருவள்ளுவர், அன்னை தெரசா, நேரு என மாறுவேடமிட்ட மாணவ சிறுவர்கள் மேளம் இசைத்து, ஆசிரியர்களையும் பெற்றோரையும் வரவேற்றனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என பல பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். மேலும், தலைகீழாக வாசித்தல், வார்த்தை விளையாட்டு, மருவிய பழமொழிகள், மரபுச் சொற்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொம்மலாட்டம் மற்றும் கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் பெற்றோர்கள் கொண்டு வந்த பாரம்பரிய உணவுப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பலரும் அவ்வுணவுகளை ருசித்தனர். மாணவர்கள் திறனை பெற்றோரும் கண்டு ரசித்தனர்.
இதுகுறித்துத் தலைமை ஆசிரியர் சிவக்குமார் கூறுகையில், "அரசுப் பள்ளிக் குழந்தைகள் திறமையானவர்கள். அவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. இதைப் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கவும், வெளி உலகத்துக்கு அரசுப் பள்ளிகளின் திறனைக் காட்டவும் இந்த சங்கமம் விழா நடத்தப்பட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT