Published : 26 Feb 2020 04:39 PM
Last Updated : 26 Feb 2020 04:39 PM

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கனிவான கவனத்துக்கு!

பொதுத்தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக மாணவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் இதோ:

1. குறிப்பேடுகள் அவசியம்
ஆண்டு தொடக்கத்தில் இருந்து நீங்கள் எடுத்த பாடக் குறிப்புகளுக்கான குறிப்பேடுகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் தேர்விற்குப் படிக்கும்போது புத்தகத்தை ஒரு வரிகூட விடாமல் முழுவதையும் படிக்கப்போவதில்லை. முன்பே படித்த பாடங்களைதான் மீள்பார்வை செய்யப்போகிறீர்கள். எனவே முக்கியக் குறிப்புகளை மட்டுமே படித்தால் சாலச் சிறந்தவையாக இருக்கும்.

2. திட்டமிடுதல் வெற்றியைத் தரும்
வெற்றியை அடைய இலக்கு அவசியம். ஓர் இலக்கைத் தீர்மானித்தால்தான் அதை நோக்கிப் பயணித்து வெற்றியை அடைய முடியும். பொதுத்தேர்விற்கு முன்பு அதற்குத் தயாராக எத்தனை நாட்கள் உள்ளன, எந்தெந்த பாடங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கடினம் என உணர்கின்ற பாடங்களுக்கு கூடுதல் நாட்களைப் படிப்பதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

3. நல்ல உறக்கம், நல்ல மதிப்பெண்களைப் பெற உதவும்
சில மாணவர்கள் தேர்விற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்காமல் படித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் தேர்வறைக்குச் செல்வதற்கு பத்து நிமிடங்களே உள்ள நிலையில்கூட புத்தகத்தைச் சுமந்தபடியே படித்துக் கொண்டிருப்பர். ஆண்டு முழுவதும் படிக்காததை இந்தக் கடைசி பத்து நிமிடங்களில் படித்து விடமுடியாது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்விற்கு முந்தைய நாள் இரவு குறைந்தபட்சம் ஆறு மணிநேரமாவது உறங்க வேண்டும். இந்த 6 மணிநேர உறக்கம் உங்களைத் தேர்வறையில் சோர்வு இல்லாமல் சிறப்பாக எழுத உதவும்.

4. வதந்திகளை நம்ப வேண்டாம்
தேர்விற்கு முன்தினம் சமூக வலைதளங்கள் மூலமாக தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டது போன்ற வதந்திகள் பரப்பப்படும். இந்த வினாக்கள்தான் கட்டாயம் தேர்வில் கேட்கப்படும் என்பன போன்ற தேவையற்ற வதந்திகளை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். குறுக்கு வழியில் சென்று எப்போதும் வெற்றியைப் பெற முடியாது. எனவே, முழு நம்பிக்கையோடு பாடங்கள் முழுவதையும் படித்துவிட்டுத் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.

5. தேர்வு நாள்
தேர்வு நாளன்று மிகச் சீக்கிரமாக எழுந்து கொள்ளுங்கள். அன்றாடச் செயல்களைக் குறிப்பிட்டநேரத்திற்குள் முடித்துவிட்டு, கட்டாயம் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்து புறப்படுங்கள். வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தேர்வு நுழைவுச்சீட்டு (Hall ticket), தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (scale) போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டு தேர்விற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்தை அடையுமாறு வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்.

6. தேர்வு எழுதுவதற்கு முன்பு
தேர்வறைக்குச் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, அமைதியாக உட்கார்ந்து 5 நிமிடம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கண்களை மூடி யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்ற ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டு அமைதியான மனநிலையில் தேர்வெழுதச் செல்லுங்கள்.

7. நேர மேலாண்மை
தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியவுடன் விடைகளை எழுதத் தொடங்காமல் வினாத்தாளை ஒரு முறைக்கு இருமுறை வினாக்களை முழுவதுமாக வாசியுங்கள். அதுபோல முதலில் நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். மேலும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 30 நிமிடங்கள், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு 40 நிமிடங்கள் என மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு விடைகளை எழுத நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்தச் செயல்பாடு நீங்கள் சரியான நேரத்தில் சரியாக தேர்வினை முடிக்க உதவும்.

8. வினாத்தாள் பற்றிய கலந்துரையாடலைத் தவிர்த்தல்
ஒரு தேர்வு முடிந்ததும் அந்தத் தேர்வின் வினாக்களுக்கான விடைகளை நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்வது மாணவர்கள் மத்தியில் இயல்பாக நிகழக்கூடிய ஒன்று. ஆனால், முதல் தேர்வை நீங்கள் சரியாக எழுதவில்லை என்ற எதிர்மறை எண்ணத்துடன் அடுத்த தேர்விற்கு படிக்கும்போது முந்தைய தேர்வைப் பற்றிய எண்ணங்கள் மனதில் வந்துபோகும். அதுமட்டுமின்றி இது அடுத்துவரும் தேர்வுகளையும் பாதிக்கும். எனவே, வினாத்தாள் பற்றி கலந்துரையாடல் செய்வதை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.

தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

-- மணிகண்டன், லயோலா கல்லூரி மாணவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x