Published : 26 Feb 2020 10:05 AM
Last Updated : 26 Feb 2020 10:05 AM

மாணவர்களுக்கு நேர்மையைக் கற்பிக்க ஈரோடு மாநகராட்சிப் பள்ளியில் நேர்மை அங்காடி

ஈரோடு

மாணவர்களுக்கு நேர்மையைக் கற்பிக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சி பள்ளியில், ‘நேர்மை அங்காடி’ திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு எச்.கே.சி. சாலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 243 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு திட்டங்கள் இப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாணவர்களுக்கு நேர்மையைக் கற்பிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் ‘நேர்மை அங்காடி’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி அங்காடியைத் திறந்து வைத்தார். இங்கு மாணவ, மாணவிகளுக்கு தேவையான பென்சில், பேனா, ரப்பர் ,
கட்டர், நோட்டு புத்தகம், வெள்ளைத்தாள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விலைப் பட்டியலும் அருகில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்களாகவே எடுத்துக் கொண்டு, அதற்கான பணத்தை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்ல வேண்டும். பணியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி கூறும்போது, ‘‘மாணவர்களின் நேர்மை பண்பை வளர்க்கும் வகையில் இந்த அங்காடி திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்டேஷ்னெரி பொருட்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.

பின்னர் மாணவர்களுக்குத் தேவையான இதர பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நேர்மை அங்காடியை வட்டாரக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி திறந்துவைத்து பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x