

பெண்களுடன் போட்டி போடுங்கள் என்று பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோவா ஆளுநர் அறிவுரை கூறியுள்ளார்.
கோவா பல்கலைக்கழகத்தின் 32-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநரும் வேந்தருமான சத்யபால் மாலிக் கலந்துகொண்டார்.
அதில் சிறப்பான மதிபெண்கள் பெற்ற 15 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் 14 பேர் மாணவிகள் ஆவர். இதுகுறித்துப் பேசிய ஆளுநர் சத்யபால், ''சிறப்புப் பதக்கங்களைப் பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டுகிறேன். குறிப்பாக மாணவிகளைப் பாராட்ட ஆசைப்படுகிறேன்.
பெண்களே (ஏறக்குறைய) எல்லா பதக்கங்களையும் வென்றிருக்கின்றனர். இது வருத்தத்துக்கு உரியது. ஆண் மாணவர்கள் எங்கே சென்றுவிட்டனர்?
இந்த நேரத்தில் அவர்களுக்கு (ஆண் மாணவர்கள்) ஒன்று கூற விரும்புகிறேன். பதக்கங்களை வெல்லும் மாணவிகள் பளுதூக்குதல், மல்யுத்த உள்ளிட்ட போட்டிகளிலும் வெற்றி பெறுகின்றனர். இப்போது அவர்கள் ஆயுதப்படைக்கும் செல்கின்றனர்.
நீங்கள் முறையாகப் பணியாற்ற வேண்டும். அவர்களுடன் போட்டி போட வேண்டும். இல்லையெனில் சமைக்கக் கூட உங்களால் முடியாது. நீங்கள் தனியாகச் செய்வதற்கு என்று எதுவுமே இல்லை. பெண்களிடம் இருந்து உத்வேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்'' என்று ஆளுநர் பேசினார்.