Published : 24 Feb 2020 10:32 AM
Last Updated : 24 Feb 2020 10:32 AM

அரசு பள்ளியில் தொல்பொருள் கண்காட்சி: மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்

தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியை மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் அருகேயுள்ள தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியை மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் “தொல்பொருட்கள் காட்டும் வரலாறு” என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் கு.தமயந்தி தலைமைவகித்தார். வரலாற்று மன்றச் செயலர் சு.பிரேமா வரவேற்றார்.

உதவி தலைமை ஆசிரியர் சி.ராமச்சந்திரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, வரலாற்றுக்கு ஆதாரத்தைத் தரும் தொல்பொருட்கள் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள எவ்வாறு உதவுகின்றன என்பதை அப்பொருட்கள் மூலம் விளக்கினார்.

இதில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், இரும்புக்கால கருப்பு, சிவப்பு மண் குவளைகள், பானை ஓடுகள், ரோமானிய, சீனநாட்டுப் பானை ஓடுகள், குறியீடுஉள்ள பானை ஓடுகள், தக்களி, வட்டச்சில்லுகள், இரும்புத் தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாணவர்கள் அவற்றைப் பார்த்துஅறிந்து கொண்டனர். நிறைவாக, தமிழாசிரியை நா.விஜயலட்சுமி நன்றி கூறினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மது சகுபர் சாதிக், ஷிபான் அலி, பிரதிபா, சோபனா, அப்சல்கான், தாரிக் அலி, ஹரிணி ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x