Published : 24 Feb 2020 09:48 AM
Last Updated : 24 Feb 2020 09:48 AM

தனித்தேர்வர்களுக்கு பிரத்யேக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு

நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10,11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச்2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதியுடன்முடிவடைகின்றன. இந்த மூன்று பொதுத்தேர்வுகளிலும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொள்கிறார்கள். இவர்களில் தனித்தேர்வர்களும் அடங்குவர்.

புதிய பாடத்திட்டம்

பொதுத்தேர்வுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு நடப்பு ஆண்டில் பிரத்யேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமாக பொதுத்தேர்வின் போது பள்ளிமாணவர்களுடன் சேர்ந்து எழுதும் வகையில் தான் தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நடப்பு ஆண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதுவார்கள்.

அதேநேரம் தனித்தேர்வர்களில் பலர் பழைய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதுவர். இதனால் இருதரப்புக்கும் வினாத் தாள்களை பிரித்து வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க தனித் தேர்வர்களுக்கு பிரத்யேகமாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதும் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘பிங்க்’ நிறத்திலும், பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு நீலநிறத்திலும் முகப்புச்சீட்டு கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். அதே போல், கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியுற்ற பாடங்களில் மறுதேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு மஞ்சள் நிறத்தில் முகப்புச்சீட்டு கொண்ட விடைத் தாள்கள்வழங்கப்படும். தேர்வு மையங்களும் தனித்தனியாகவே அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x