Published : 21 Feb 2020 01:41 PM
Last Updated : 21 Feb 2020 01:41 PM
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பொம்மலாட்டப் பயிற்சியை அரசு நடத்தி வருகிறது. இக்கலையைக் கற்றுத் தரும் வாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கினால் இக்கலை மறையாது என்கிறார்கள் கலைஞர்கள்.
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறை மூலம் பொம்மலாட்டக் கலைப் பயிலரங்கம் தற்போது முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராம வளாகத்தில் நடந்து வருகிறது. இந்த பொம்மலாட்ட பயிலரங்கில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
கலையைக் கற்கும் நோக்கில் நடைபெறும் இப்பயிற்சி தொடர்பாக கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் முகமது மன்சூர் கூறுகையில், "கலையை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர். பயிற்சி பெற்றோருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
ராஜப்பா கலைக்குழுவின் சார்பில் மாணவ, மாணவியருக்குக் கலையைக் கற்றுத் தரும் செல்வராஜா கூறுகையில், "பொம்மலாட்டத்தில் 5 வகைகள் உள்ளன. நாங்கள் கற்றுத் தருவது தோல்பாவை பொம்மலாட்டம். தோலினால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்துக் கதை வழியாக பார்வையாளர்களைச் சென்றடைவோம். நாடகம், மீடியா வளர்ச்சியால் தற்போது பொம்மலாட்டத்தை வைத்து வாழ்வது கடினமாகி வருகிறது.
அதே நேரத்தில் இக்கலையைக் காக்க, குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் வாய்ப்பை புதுச்சேரி அரசு அளித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் வாய்ப்பு ஏற்படுத்தினால் இக்கலையைக் காக்க முடியும். எங்களின் வாழ்வும் நீடிக்கும். இப்பயிற்சியை மாணவர்கள் மட்டுமில்லாமல் விருப்பமுள்ளோரும் கற்கலாம். ஒரு மாதத்தில் கற்க முடியும்.
குழந்தைகளுக்குக் கதை சொல்லல் வழக்கம் வழக்கொழிந்து வருகிறது. பொம்மலாட்டம் மூலம் கதை சொன்னால் நல்ல விஷயங்கள் அவர்கள் மனதில் பதியும். அத்துடன் ஆதி கலையைத் தொடர இளையோரும் பயிற்சி பெறுவது அவசியம்" என்றார்.
பயிற்சி தொடர்பாக மேலும் தொடர்பு கொள்ள: 94446 71029, 7601912631.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT