Published : 20 Feb 2020 09:47 AM
Last Updated : 20 Feb 2020 09:47 AM
கேரள மாநிலத்தை தூய்மையாக்க வைத் திருக்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கூடுதல் கழிவறை அமைக்க அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது, நெடுஞ்சாலை ஓரங்களில் கழிவறையை அமைக்க, உள்ளாட்சி நிர்வாகம் சார்பாக 3 சென்ட் நிலத்தை அடையாளம் காண உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கேரள மாநில எல்லைக்கு உட்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுமார் 12 ஆயிரம் கழிவறை அமைய உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடுவானில் 2 சிறிய ரக விமானம் மோதி விபத்து
மெல்போர்ன்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு வடக்கே உள்ள மங்களூர் மேலே சுமார் 4000 அடி உயரத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது அதேபோன்ற சிறிய ரக விமானம் ஒன்று அதன் பக்கவாட்டில் மோதியது. நடு வானில் ஏற்பட்ட இந்த விபத்தினால் 2 விமானங்களும் கீழே விழுந்து நொறுக்கியது. அதில் பயணம் செய்த விமானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி பீட்டர் கோகர் கூறியதாவது: ஒரு நொடி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விமானங்கள் கிளம்பி இருந்தால், விபத்து ஏற்பட்டு இருக்காது. இரு விமானங்கள் ஒரே புள்ளியில் சந்தித்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
இரு விமானங்களும் ஏன் ஒரே பாதையில் பயணித்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு பீட்டர் தெரிவித்தார்.
சத்ரபதி சிவாஜி கோட்டையை சீரமைக்க ரூ. 23 கோடி ஒதுக்கீடு
புனே
மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த நாள் விழா மகாராஷ்டிரா முழுவதும் நேற்று கொண் டாடப்பட்டது. அப்போது துணை முதல்வர் அஜித் பவார் ஜூன்னார் பகுதியில் உள்ள சிவனேரிக் கோட்டைக்கு சென்று பார்வையிட்டார்.
இந்த கோட்டையில்தால் சத்ரபதி சிவாஜி 1630-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி பிறந்தார். இதுதொடர்பாக துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், “ மகாராஜா சிவாஜி பிறந்த சிவனேரிக் கோட்டையை பாரம்பரியம் மாறாமல் மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த மாநில அரசு சார்பாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ராஜ்நாத் சிங்குக்கு ஐப்பான் அமைச்சர் பாராட்டு
புதுடெல்லி
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ உலக நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்களிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தான் ட்விட்டரில் அதிகமான பின்பற்றுபவர்களை கொண்டுள்ளார்” என்று பாராட்டு தெரிவித்தார்.
இதற்காக ராஜ்நாத் சிங் கோனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ட்விட்டரில் சுமார் 1.5 கோடி பேர் பின்பற்றி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT