Published : 19 Feb 2020 08:03 AM
Last Updated : 19 Feb 2020 08:03 AM
அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நேரடி நியமனம் வேண்டாம் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். அதிலும் ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன.
ஆசிரியர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்தபுரிதல் இருக்கும். அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியர்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது.
பஞ்சாப், பிஹார் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. நேரடி தலைமை ஆசிரியர் நியமன முறையால் இடைநிலை ஆசிரியர்கள் பெரிதும்பாதிக்கப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு பதவி உயர்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியையும் பறிபோய்விடும். எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியர் நியமன முறையை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT