Published : 18 Feb 2020 06:30 PM
Last Updated : 18 Feb 2020 06:30 PM
சிபிஎஸ்இ மாதிரி வினாத்தாளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த மனுதாரருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவீந்தர்நாத் துபே என்னும் மனுதாரர் கடந்த 26 ஆண்டுகளாக கணக்குப் பதிவியல் பாடத்தை எடுத்து வருகிறார். அவர் சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த மாதிரி வினாத்தாளில் 8 கேள்விகளுக்குத் தவறான பதில் அளிக்கப்பட்டிருப்பதாகவும் மார்ச் 3-ம் தேதி கணக்குப் பதிவியல் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ''பொதுத் தேர்வுகளில் இதே தவறான பதில்களை மாணவர்கள் எழுதினால், அவர்களின் 8 மதிப்பெண்கள் குறையக்கூடும். இதனால் மாதிரி வினாத்தாளில் உள்ள தவறான பதில்களை சிபிஎஸ்இ நீக்க, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அமர்வு விசாரித்தது. மனுவை 'அற்பமானது' என்று விமர்சித்த நீதிபதிகள், ''உங்களுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. நீங்கள் தேர்வுக்கான வினாத்தாள் குறித்துப் பேசவில்லை. மாதிரி வினாத்தாள் குறித்துப் பேசுகிறீர்கள். அவை மாணவர்களின் பயிற்சிக்கானவை மட்டுமே'' என்றனர்.
மனுதாரர், ''இது தொடர்பான ஆதாரத்துடன் வந்துள்ளேன்'' என்று கூற, நீதிபதிகள் ''அபராதம் இன்னும் அதிகரிக்கக் கூடும். அதை நாங்கள் செய்ய விரும்பவில்லை, செல்லுங்கள்'' என்று கூறி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT