Last Updated : 18 Feb, 2020 08:09 AM

 

Published : 18 Feb 2020 08:09 AM
Last Updated : 18 Feb 2020 08:09 AM

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட் ’ தகுதி தேர்வு எப்போது? - 2 ஆண்டுகளாக காத்திருக்கும் முதுநிலை பட்டதாரிகள்

கோவை

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள், உயர் கல்வித் துறையால் நடத்தப்படும் ‘செட்' (State EligibilityTest) எனப்படும் மாநிலத் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

இதற்காக உயர்கல்வித் துறை மாநிலப் பல்கலைக்கழகங்கள் மூலமாக இத்தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இத்தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: கொடைக்கானல்அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2016, 2017, 2018 ஆகிய 3 ஆண்டுகள் ‘செட்' தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடைசியாக கடந்த 2018 மார்ச் மாதம் முதல் வாரத்தில் இத்தேர்வு நடத்தப்பட்டது.

‘செட்' தகுதித் தேர்வு நடத்தநோடல் சென்டர்-ஆக தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனம், 3 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிக்கும்.

இதன்படி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்தி முடித்துவிட்டது. அதன் பின்னர் இத்தேர்வை நடத்துவதற்கான நோடல் சென்டர் எது? என்ற அறிவிப்பும், இத்தேர்வு நடைபெறுவது குறித்தும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நோடல் சென்டர்-ஆக தேர்வு செய்யப்பட்டு, ‘செட்' தகுதித்தேர்வு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாயின. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, ‘செட்' தகுதித்தேர்வுஅல்லது பிஹெச்.டி. கல்வித்தகுதி அவசியம். எம்.ஃபில். கல்வித்தகுதி ஆராய்ச்சிக்கு பயிற்சியாகவே கருதப்படுகிறது. வேலைவாய்ப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இந்நெறிமுறைகளையே வேலைவாய்ப்பில் பின்பற்றி வருகின்றன. உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு மற்றும் விளம்பரங்களில் இந்த தகுதிகளை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

இந்நிலையில் பிஹெச்.டி.முடிக்க சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதால், ‘செட்' தகுதித்தேர்வு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்த வேண்டும். ‘செட்' தகுதித்தேர்வைப் போன்றே நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணி யாற்ற விரும்புபவர்களுக்கான ‘நெட்' (National Elegiblity Test) எனப்படும் தேசிய தகுதித்தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

2 தாள்களைக் கொண்ட இத்தேர்வில் முதல்தாள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால், தாய்மொழி வழியில் கல்வி பயின்றவர்கள், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். புரிந்து கொள்வதில் சற்று கடினமான முதல் தாளால் பலமுறை எழுதியும் தேர்ச்சிபெற முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், மாநில மொழியில் நடத்தப்படும் 'செட்' தகுதித்தேர்வு நடத்தினால் மட்டுமே, தமிழ்வழிக் கல்வியில் கல்வி கற்றவர்களால் தேர்ச்சி பெற முடியும். இதைகருத்தில் கொண்டு இத்தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசின்உயர் கல்வித் துறை விரைவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கோவை மண்டல செயலர் ப.ரமேஷ் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தகுதியான பலர் இவ்வேலைவாய்ப்புக்காக தயாராகி வருகின்றனர். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல் படி, அரசு மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களில் ‘செட்', ‘நெட்' தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிஅல்லது பிஹெச்.டி. பட்டம் பெற்றவர்களே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. முதுநிலை பட்டதாரிகள் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும் வகையில், 'செட்' தகுதித்தேர்வு நடத்துவது, அவர்களுக்கு பயனுள்ளதாகவும், எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாகவும் இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x