Published : 17 Feb 2020 11:41 AM
Last Updated : 17 Feb 2020 11:41 AM

பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மேற்கு வங்கம்

பொதுத்தேர்வுகளை முன்னிட்டு ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உயர்நிலை வகுப்புகளுக்கான (மத்யமிக்) தேர்வுகள் பிப்ரவரி 18-ம் தேதி தொடங்குகின்றன. அதேபோல மேல்நிலை வகுப்புத் (உச்சா மத்யமிக்) தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகின்றன. இரண்டு தேர்வுகளும் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

இதை முன்னிட்டு மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாகவே இந்தத் தடை அமலுக்கு வருகிறது. அனைத்துப் பொதுத் தேர்வுகளும் முடியும் வரை ஒலிப்பெருக்கிகளுக்கான தடை நடைமுறையில் இருக்கும்.

வீட்டுப் புறங்கள், பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான தடை அமல்படுத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் பொதுத் தேர்வுகளின்போது ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தொந்தரவின்றிப் படிக்க முடிவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x