Last Updated : 17 Feb, 2020 08:27 AM

 

Published : 17 Feb 2020 08:27 AM
Last Updated : 17 Feb 2020 08:27 AM

வெற்றி நூலகம்: புத்தகம் எனும் அன்பளிப்பு!

தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைப் பத்திரப்படுத்துவதற்காகவே மும்பையில் ‘ராஜகிரகம்’ என்னும் வீட்டை கட்டியவர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர். லண்டன் நூலகத்தில் 20 ஆண்டு காலம் படித்து ஆய்வு செய்த பிறகுதான் பொதுவுடைமை தத்துவத்தை உலகிற்கு அளித்தார் காரல் மார்க்ஸ். இப்படி புத்தகங்களால் செதுக்கப்பட்டவர்கள் பின்னாளில் உலகையே செதுக்கும் மாமனிதர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைக்குப் பரிசளிக்க விரும்பினால் புத்தகங்களைப் பரிசாக கொடு என்கிறது சீனப் பழமொழி. நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவது என்பதும் ஒரு விதமான அன்பளிப்புதானே! வாருங்கள் மாணவர்களாகிய உங்களுக்குப் பயன்படக் கூடிய சில நல்ல புத்தகங்களைத் தெரிந்து கொள்வோம்.

தினந்தோறும் மேடை ஏறலாம்!

பேச்சாற்றல் என்னும் கலையை வளர்த்துக்கொள்ள அடுக்கு மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல கருத்துகளைக் கோர்வையாகவும் தெளிவாகவும் முன்வைக்க தெரிந்திருக்க வேண்டும். அதற்கு வாசிப்பு அவசியம். அதிலும் கல்வி எழுச்சி தினம், குழந்தைகள் தினம், குடியரசு தினம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தினம் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் சிறப்புரை நிகழ்த்த வழிகாட்டும் ஓர் புத்தகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல கிடைத்தால் எப்படி இருக்கும்! அப்படிப்பட்ட புத்தகம்தான், ‘மேடை பேச்சு- வெற்றிக்கு வழிகாட்டி’.

‘மேடை பேச்சு- வெற்றிக்கு வழிகாட்டி’
கமலா சுவாமிநாதன்
வானதி பதிப்பகம்
23, தீனதயாளுதெரு
தி.நகர், சென்னை -17.
போன்: 24342810, 24310769.
ரூ.70
/-

நேரடியாக பதில் சொல்ல ரெடி!

பள்ளிப் படிப்பிலும் கல்லூரி பட்டப் படிப்பிலும் அதிகபட்ச மதிப்பெண்களைக் குவித்து வெளி உலகில் அநேக மாணவர்கள் அடியெடுத்து வைக்கிறார்கள். அவர்களில் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில். ஏனென்றால் நேர்முகத் தேர்வில் வெல்வதற்கான பாடத்திட்டத்தை இதுவரை எந்த பல்கலைக்கழகமும் வகுக்கவில்லை. அதிலும் நவீன கார்ப்பரேட் அலுவலகங்களில் பணி கிடைக்கப் பல கூறுகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டி உள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டு இருக்கும் புத்தகம்தான் ‘நேர்முகம் கவனம்’. நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான வழிகாட்டல் ஏட்டுப்பாடமாக அல்லாமல் சம்பவங்களின் விவரணை, மாதிரி நேர்காணல் அலசல் ஆகியவற்றின் மூலம் இதில் விளக்கப்பட்டுள்ளன.

‘நேர்முகம் கவனம்’
ஜி.எஸ்.எஸ்.
தமிழ் திசை பதிப்பகம்
Kasturi Building
No.859&860
Anna Salai,
Chennai – 600 002.
ரூ.140/-

மனம் ஒரு குரங்குதானோ!

தாங்க முடியாத தலைவலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது நமக்கு பிடித்தமான பாடலையோ, நகைச்சுவை காட்சியையோ பார்க்கும்போது தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருப்போம். அந்த காட்சி முடிந்தவுடன் மீண்டும் தலைவலி மண்டையைப் பிளக்கும். இடைபட்ட ஐந்து நிமிடங்கள் தலைவலி எங்கே காணாமல் போனது? அது எங்கும் செல்லவில்லை நம்முடைய மனம்தான் வேறொன்றில் லயித்து விட்டது. இப்படி நம் உடலையும் மீறி பலவற்றைத் தீர்மானிக்கும் சக்தியாக மனம் உள்ளது. அவ்வளவு ஏன் குரங்கு தன் உடம்பை கொண்டுதான் மரம் விட்டு மரம் தாவுகிறது. ஆனால், மனம் ஒரு குரங்கு என்கிறோம். ஏனென்றால் உடல் செல்ல முடியாத இடத்துக்குக் கூட ஒரு நொடி பொழுதில் மனம் நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த மனத்தை கட்டுப்படுத்த, சிந்தனையை மட்டுப்படுத்த, எண்ணங்களைச் சீர்படுத்தக் கற்றுக்கொண்டால் பல சாதனைகளைப் புரிய முடியும். இதை ஏற்கெனவே மாணவர்களுக்கு அழகுறச் சொல்லித் தந்தது, ‘மனசு போல வாழ்க்கை’ புத்தகம். அதன் அடுத்த பாகம் தற்போது வெளிவந்துள்ளது.

‘மனசு போல வாழ்க்கை 2.0’
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
தி இந்து குழுமத்தில் தமிழ் திசை பதிப்பகம்
KSL Media Ltd,
Kasturi Building No.859&860
Anna Salai, Chennai – 600 002.
ரூ.100/-

ரசிக்க கதை, கற்க அறம்

நீதிநெறிகள் தேவைப்படுவது பெரியவர்களுக்குத்தான் குழந்தைகளுக்கு அல்ல. குழந்தைகளுக்குத் தேவை கதைகளே என்ற எண்ணத்துக்குச் செயல்வடிவம் தருபவர் மூத்த கல்வியாளர் ச.மாடசாமி. அவர் எழுதிய கதை கட்டுரைகளின் தொகுப்பு, ‘வித்தியாசம்தான் அழகு’ புத்தகமாக அண்மையில் வெளிவந்து இருக்கிறது. இதில் குழந்தைகளுக்கான கதைகளாலும் பெரியவர்களுக்கான நீதிகளாலும் 20 அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

’வித்தியாசம்தான் அழகு’
ச.மாடசாமி
அகரம் அறக்கட்டளை வெளியீடு
75, திருவள்ளுவர் சாலை,
கைக்கான் குப்பம்,
ராமாபுரம் ரோடு, வளசரவாக்கம்,
சென்னை - 6000087.
விலை:ரூ.100/-

எளிய தமிழில் கணினி அறிவியல்

தமிழர்கள் கணினித் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அமெரிக்க நிறுவனமான கூகுளின் தலைமை செயலதிகாரியாகத் தமிழரான சுந்தர் பிச்சை செயல்படுகிறார். எச்.சி.எல். என்ற பன்னாட்டு நிறுவனத்தை நிறுவியவர் தமிழரான சிவநாடார். இது போன்ற செய்திகள் நமக்கு பெருமிதம் அளிக்கின்றன. ஆனாலும் சீனர்கள், ஜப்பானியர்களைப் போல நமது தாய்மொழியான தமிழில் கணினி மொழியை கற்றுக்கொள்ளும் சூழல் இன்றுவரை பரவலாக்கப்படவில்லை. கணினியைக் கண்டால் தமிழனுக்கு எழும் பயத்தைப் போக்கவே ‘கம்ப்யூட்டர் பாகம் -1 ஓர் அறிமுகம்’ புத்தகம் எழுதப்பட்டுள்ளது. எளிய தமிழில் விரிவாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ள இப்புத்தகம் மாணவர்களுக்குக் கைகொடுக்கும்.

‘கம்ப்யூட்டர் பாகம் -1 ஓர் அறிமுகம்’
பாலாஜி, எம்.டெக்.,
சார்க் பதிப்பகம்
28, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம்,
சென்னை - 600 024.
போன்: 90250 44447.
ரூ.120/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x