Published : 17 Feb 2020 08:20 AM
Last Updated : 17 Feb 2020 08:20 AM
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2003-ம்ஆண்டுமுதல் 2007-ம் ஆண்டுவரைசோதனைக் காலம் என்று சொல்லலாம். இந்த காலகட்டத்தில் இந்திய அணி சர்வதேச போட்டிகளில் சொதப்பியதுடன் அணிக்குள் தேவையில்லாத சச்சரவுகளும் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் சவுரவ் கங்குலியின் வேண்டுகோளின்படி கிரேக் சேப்பல் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பயிற்சியாளர் ஆனபிறகு கங்குலியுடனே மோதத் தொடங்கினார்.
இந்த நேரம் பார்த்து ஒருசில போட்டிகளில் கங்குலி சரியாக ஆடாமல் போகஅவரை அணியில் இருந்தே நீக்கினார். இதைத்தொடர்ந்து ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இருப்பினும் சரியான சேர்க்கை அமையாததாலும், அணிக்குள் இருந்த சில உரசல்களாலும் சர்வதேச போட்டிகளில் இந்தியா தடுமாறியது. உச்சகட்டமாக 2007-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்தியா.
இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த சமயத்தில், நம்பிக்கை நட்சத்திரமாக அணிக்குள் தோன்றினார் மகேந்திர சிங் தோனி. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரைச் சேர்ந்த தோனி, ஆரம்பத்தில் ஒரு கால்பந்து வீரராகத்தான் இருந்தார். ஆனால் அவர் படித்த டிஏவி சியாமளி பள்ளியின் விளையாட்டுத் துறை ஆசிரியர் அவரை கிரிக்கெட்டின் பக்கம் திருப்பிவிட்டார். சில நாட்களிலேயே கிரிக்கெட்டின் அரிச்சுவடிகளைக் கற்றுக்கொண்ட தோனி, தன் விக்கெட் கீப்பிங் திறமையாலும், சிறப்பான பேட்டிங்காலும் உள்ளூர் போட்டிகளில் கலக்க, இந்திய அணியில் 2005-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டார்.
2007-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்க, இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தோனி தலைமையிலான அணிஅனுப்பப்பட்டது. திராவிட், சச்சின், கங்குலி போன்ற மூத்த வீரர்களை ஓரம்கட்டிவிட்டு யுவராஜ் சிங், காம்பீர், ஷாந்த், உத்தப்பா என பல இளம் நட்சத்திரங்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.
அணியில் அப்போது மூத்தவராக இருந்த யுவராஜ் சிங்கை கேப்டன் ஆக்காமல், அவருக்கு பதிலாக தோனியை கேப்டன் ஆக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் டி20 உலகக்கோப்பையில் தோனியின் தலைமையின்கீழ் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடுவாரா, அல்லது வேண்டுமென்றே சொதப்புவாரா என்ற கேள்விக்குறி இருந்தது.
ஆனால் கேப்டன் பதவியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த தொடரில் அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடினார் யுவராஜ் சிங். அவரது பேட்டிங்கும் பந்துவீச்சும் இந்த தொடரில் தோனிக்கும், இந்திய அணிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியினரைக் கதறடித்தார் யுவராஜ் சிங். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். இதனால் புத்துயிர் பெற்ற இந்திய வீரர்கள் இதே வேகத்தில் டி20 உலகக் கோப்பையை வென்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT