Published : 14 Feb 2020 11:15 AM
Last Updated : 14 Feb 2020 11:15 AM

தமிழக பட்ஜெட் 2020: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு; ஓபிஎஸ் அறிவிப்பு

2020-2021 ஆம் ஆண்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

இதில், பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க தமிழக அரசு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்புக் கல்வி ஆண்டில் 76 ஆயிரத்து 927 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,018.39 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாணவர் ஆசிரியர் விகிதம் கட்டாயக் கல்விச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் போதுமான அளவில் உள்ளது.

அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.520.13 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

உயர் கல்வித்துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது".

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x