Published : 14 Feb 2020 10:50 AM
Last Updated : 14 Feb 2020 10:50 AM

மின்வாரியக் கணக்கீட்டாளர் தேர்வு: 100-க்கு 80 கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும்: மின்வாரியம்

மின்வாரியக் கணக்கீட்டாளர் தேர்வில் 100 கேள்விகளில் 80 கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கணக்கீட்டாளர் பதவிக்கான 1,300 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

கலை அல்லது அறிவியல் அல்லது வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மின்வாரியப் பணி என்பதால் அளவீட்டுக் கருவி மூலம் கணக்கீடு செய்வதற்கும் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மின்வாரிய கணக்கீட்டாளர் தேர்வில் 100 கேள்விகளில் 80 கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது 100-க்கு 20 கேள்விகள் மட்டுமே தமிழில் இருக்கும். பட்டப்படிப்பே இப்பணிக்கான அடிப்படைத் தகுதி என்பதால் கேள்விகளில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 100 கேள்விகளும் தமிழில் மட்டுமே கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆங்கிலத்தில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்றே விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடிந்துவிட்டது. தேர்வு நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x