Published : 14 Feb 2020 09:28 AM
Last Updated : 14 Feb 2020 09:28 AM
ஜெ.ஞானசேகர்
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகதமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளில் 30.9 சதவீதம் பேர் குள்ளத்தன்மையாலும், 22.2 சதவீதம் பேர்மெலிந்த தேகம் மற்றும் உயரத்துக்கேற்ற எடையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப நலன் மற்றும் சுகாதார கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
இதையொட்டி, ஊட்டச்சத்து குறைபாட்டை தொடக்க நிலையிலேயே தடுக்கும் வகையில் மத்திய, மாநிலஅரசுகள் சார்பில் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் திருச்சி தென்னூர் விசுவநாதபுரத்தில் உள்ள சுப்பையா நினைவுநடுநிலைப் பள்ளியில் அட்சய பாத்திரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து தினமும் ஏதாவது காய்கறிகளை பள்ளிக்கு எடுத்து வந்துபள்ளியில் வைக்கப்பட்டுள்ள அட்சயபாத்திரத்தில் போட்டுவிட வேண்டும்.
இந்த காய்கனிகள் மதிய உணவு தயாரிக்கும்போது சேர்த்து சமைக்கப்பட்டு, சத்துணவுடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் காய்கறிகளை உண்பதை உறுதி செய்வதும், இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைவதுமே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
புதன்கிழமையன்று பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிப்காட் வட்டாட்சியர் கே.கோகுல், சைன் திருச்சி அமைப்பின் நிறுவனர் த.மனோஜ் தர்மர் ஆகியோர் அட்சய பாத்திர திட்டத்துக்கு காய்கறிகளை வழங்கி புதுமையான இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவக்குமார், வட்டார கல்வி அலுவலர்கள் சி.அருள்தாஸ் நேவிஸ், ஆர்.ஜெயலட்சுமி, செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் பி.சிங்காரம், செங்குளம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஆர்.சிராஜூதீன், யோக பயிற்றுநர் காயத்ரி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.மணிகண்டன், துணை தலைவர் ஆர்.சீத்தா மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT