Published : 14 Feb 2020 08:15 AM
Last Updated : 14 Feb 2020 08:15 AM
சீசீனாவின் வூஹான் நகரில் நோவல் கரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 1,300-ஐ தாண்டி விட்டது. ஆயிரக்கணக்கானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து வூஹான் நகரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரை சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் ஏற்கெனவே பல நாடுகள் களம் இறங்கி விட்டன. இதற்கிடையில், நாட்டு மக்களிடம் பதற்றத்தைத் தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க,ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகளில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் பல இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள், மால்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. அதனால், ஆன்லைன், தொலைக்காட்சி வழியாக மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று சீன கல்வித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், ஆன்லைனில் வகுப்பு எடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை சீன அரசு வெளியிட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய பாடங்களை உள்ளடக்கிய கல்வியை வழங்க ‘கிளவுட் பிளாட்பார்ம்’ பிப்ரவரி 17 அன்று தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை பற்றியும் கற்றுக் கொள்ள வேண்டும். தேசபக்தி, வாழ்க்கை முறை உள்ளிட்ட கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT