Published : 12 Feb 2020 08:17 AM
Last Updated : 12 Feb 2020 08:17 AM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரத்தில்தான் முதல்முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்து தற்போது சீனாவின் பல மாகாணங்களுக்கும், இந்தியா, பிலிப்பைனஸ், தாய்லாந்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி சீனாவில் இதுவரை ஆயிரத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வூஹான் நகரில் இருந்து திருச்சூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் ஜனவரி 30-ம் தேதி கேரளா திரும்பினார்.
அவரை சோதனை செய்தபோது, அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். மத்திய அரசின் மருத்துவ பிரிவின் வழிமுறைகளின் படி அவருக்கு பல்வேறு கட்ட சோதனைச் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மற்றொரு மாணவிமற்றும் மாணவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதனால், கேரளாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில பேரிடராக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். மேலும், திருச்சூர், ஆலப்புழா, காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேரும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், கேரளாவில் முதல் முதலாக கரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவிக்கு மேற்கொள்ள பட்ட 4 பரிசோதனையில் கரோனா பாதிப்பு குறைந்து நெகட்டிவ் என முடிவுகள் வெளியாகி உள்ளது. மேலும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், இறுதியாக 5-வது சோதனையிலும் நெகட்டிவ் முடிவு வந்தால்,மாணவி தனது வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் திருச்சூர் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிகொண்டு இருக்கும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி குணமடைந்து வருவதால், மருத்துவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT