Published : 11 Feb 2020 06:32 PM
Last Updated : 11 Feb 2020 06:32 PM

கால்நடைத் துறை தேர்வு சென்னையில் மட்டுமே நடக்கும்:  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கால்நடைத் துறை பணியிடங்களுக்கான தேர்வு சென்னையில் மட்டும் நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கால்நடை மருத்துவத் துறையில் 1141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான 18.11.2019 நாளிட்ட தேர்வாணைய அறிவிக்கையின் (விளம்பர எண்.562. அறிவிக்கை எண். 32/2019) பத்தி 10-ல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 7 தேர்வு மையங்களில் மேற்குறிப்பிட்ட பதவிக்கான எழுத்துத் தேர்வு 23.02.2020 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த எழுத்துத் தேர்வினை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இத்தேர்வுக்கு சென்னை நீங்கலான இதர தேர்வு மையங்களைத் தேர்வு செய்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு இதுகுறித்த தகவல், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை ஏற்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதத் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தேர்வெழுதும் நபர்களுக்கு ஆதார் கட்டாயம், தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, 3 மாவட்டங்களை மட்டுமே தங்களுடைய தேர்வு மைய விருப்பமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட 6 சீர்திருத்தங்களை அண்மையில் டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x