Published : 11 Feb 2020 01:04 PM
Last Updated : 11 Feb 2020 01:04 PM
தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்துக்கு அருண் ஜேட்லியின் பெயரைச் சூட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஃபரிதாபாத் தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்துக்கு முன்னாள் நிதியமைச்சரும் பத்ம விபூஷண் விருதாளருமான அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்படும் . இதன் மூலம் அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் என்று வருங்காலத்தில் அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் பதிவுபெற்ற ஓர் அங்கம் ஆகும். இது 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடிமைப் பணித் தேர்வில் (யூபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று அதிகாரிகள் ஆவோருக்கு நிதி மற்றும் கணக்குகள் குறித்துப் பயிற்சி அளிக்க இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைவராக இருப்பார். மத்திய அரசின் உயர் மற்றும் இடைநிலை நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இதில் பயிற்சி பெறுவர். மாநில அரசுகள், பாதுகாப்புத் துறை, வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கான பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2014 ஆண்டு மே 26 முதல் 2019 மே 30-ம் தேதி வரை அருண் ஜேட்லி மத்திய நிதியமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT