Published : 11 Feb 2020 11:36 AM
Last Updated : 11 Feb 2020 11:36 AM

முறைகேடான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிகளுக்கு கேரள முதல்வர் எச்சரிக்கை

முறைகேடாக ஆசிரியர்களை நியமிப்பது குறித்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், அங்குள்ள சட்டப்பேரவையில் தன்னுடைய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அதில், கேரள கல்விக் கொள்கையை மீறி சில பள்ளிகள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதில் முறைகேடு நிகழக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், 'அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகத்தினர் சிலர், அரசே ஏன் பள்ளிகளை எடுத்து நடத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியதைப் பார்த்தேன். அவர்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பள்ளிகளை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அங்குள்ள ஆசிரியர்களுக்கு ஊதியத்தை எங்களால் தரமுடியும் எனும்போது, ஏன் சிறிது வாடகையைக் கொடுத்து பள்ளியை நடத்த முடியாது?

மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் பினராயி விஜயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x