Published : 10 Feb 2020 11:47 AM
Last Updated : 10 Feb 2020 11:47 AM

ஒலிம்பிக்-11: அதிசயத்தை நிகழ்த்திய வீரர்!

ஜி.எஸ்.எஸ்.

1932 ஒலிம்பிக்ஸில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விளையாட்டு வீரர் யார்?

ஹங்கேரியைச் சேர்ந்த ஸ்டாவன் பெல்லே (Istvan Pelle ) என்பவரை குறிப்பிடலாம். 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்ஸில் இவர் தன்னை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், 1930 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் horizontal bar பிரிவில் தங்கத்தை வென்றார். 1932 ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். தவிர இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வேறு.

ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற ஒரே பிரிவில் இவ்வளவு பதக்கங்களைப் பெற முடியுமா?

முடியும். ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் ஆகியவற்றில் எட்டு பதக்கங்களைக்கூட அறுவடை செய்யலாம்.

ஸ்டாவன் பெல்லே ஓர் அதிசயத்தை நிகழ்த்தி விட்டார் இல்லையா?

அவரது வாழ்க்கை மேலும் அதிசயமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகுதன் தாய்நாடான ஹங்கேரியை விட்டு வெளியேறினார். பல உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு பாடகராகவும், இசைக்கலைஞராகவும் தன் முத்திரையைப் பதித்தார். ஒருவழியாக அர்ஜெண்டினாவில் தங்கினார்.

1932 ஒலிம்பிக்ஸுக்கு ஏதாவது பின்னடைவுகள் உண்டா?

பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் நடந்து கொண்டிருந்த காலம் அது. தவிர போட்டியிடும் பல நாடுகளுக்கு லாஸ்ஏஞ்சல்ஸ் மிகவும் தொலைவில் இருந்தது. எனவே பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. தவிரஅதிசயமாக எந்த நாடும் ஒரு விளையாட்டில் மூன்று பேரைத்தான் அனுப்பலாம் என்ற விதியை அமல்படுத்தினார்கள்.

கால்பந்து அந்த ஒலிம்பிக்ஸில் இருந்து நீக்கப்பட்டது. ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமே தங்கவைக்கப்பட்டனர். விளையாட்டு வீராங்கனைகள் சாப்மன்பார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

பின்லாந்தின் பிரபல தடகள வீரர் பாவோ நுர்மிக்கு 1932 ஒலிம்பிக்ஸில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாமே?

ஆமாம். ஆனால், விளையாட்டுத் தோல்வியால் அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை. அவர் அந்த ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை எந்தத் தனிப்பட்ட முறையிலும் விதிக்கப்படவில்லை.

ஒலிம்பிக்ஸ் என்பது அமெச்சூர்களுக்காக மட்டுமே என்பதைக் கட்டாயமாக்கினர். அதாவது விளையாட்டையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு ஒலிம்பிக்ஸில் தடைவிதிக்கப்பட்டது. அந்தவிதத்தில் பின்லாந்தைச் சேர்ந்த பாவோ நுர்மியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடகளவீரர் ஜுல்ஸ் லடெளமேக் என்பவரும் தங்களை முழுநேர விளையாட்டு வீரர்களாகப் பதிவு செய்து கொண்டதால், ஒலிம்பிக்ஸில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் அதற்கு நிகரான சாதனையை யாரும் செய்யவில்லை ஏன்?

ஈட்டி எரியும் பிரிவிலும், தடை ஓட்டப் பிரிவிலும் பேப்டி ட்ரிக்ஸன் என்ற அமெரிக்கப் பெண் தங்கப்பதக்கங்கள் வென்றார். கோல்ஃப், கூடைப்பந்து,பேஸ்பால் போன்ற வற்றிலும்கூட தலைசிறந்து இவர் விளங்கியவர். 1932 ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டும் போட்டியில்கூட இவர் தங்கம் வென்றிருப்பார். ஆனால், இவர்செய்த ஒரு டெக்னிக்கல் தவறு காரணமாக இரண்டாம் இடம்தான் என்று முடிவானது.

போலந்தைச் சேர்ந்த ஸ்டானிஸ்லவா என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். அதற்கு அடுத்த ஒலிம்பிக்ஸில் (1936) 100 மீட்டர் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆனாலும் அவர் இவற்றில் பங்கேற்க தகுதியற்றவர் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x