Published : 07 Feb 2020 07:34 PM
Last Updated : 07 Feb 2020 07:34 PM

பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி நிறைவு: சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு துணை முதல்வர் பரிசு வழங்கினார்!

பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி நிறைவு விழாவில், சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசு வழங்கினார்.

பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இந்தப் பரிமாற்ற நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, 15 முதல் 29 வயது வரையுள்ள 200 பழங்குடி இளைஞர்கள் பங்கு பெற்றனர்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழங்குடி இளைஞர்கள் சென்னையில் உள்ள முக்கியத் தலங்களைச் சுற்றிப் பார்த்தனர். மேலும் விஷக்கடியிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, அப்படிப் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான முதலுதவியை எவ்வாறு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த 7 நாட்களிலும் தமிழகத்தின் கலாச்சாரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை சத்தீஸ்கர் பழங்குடி இளைஞர்கள் அறிந்துகொண்டனர்.

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அடையாறு, நேரு யுவ கேந்திரா இளைஞர் விடுதி அரங்கத்தில், மத்திய அரசின் நேரு யுவ கேந்திரா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, 12-வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்ட முகாம் நிறைவு விழாவில் பங்கேற்று, சிறந்த பழங்குடியின இளைஞர்கள் / இளம்பெண்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய ஆயுதப்படை காவல்துறை துணைத்தலைவர் சோனல் வி மிஸ்ரா, நேரு யுவ கேந்திரா தமிழகம் மற்றும் புதுவை மாநில இயக்குநர் எம்.என்.நடராஜ், சென்னை நேரு யுவ கேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x