Published : 07 Feb 2020 01:00 PM
Last Updated : 07 Feb 2020 01:00 PM

யூபிஎஸ்சி பணி நியமனம் கடந்த 4 ஆண்டுகளில் குறைவு: பணியாளர் அமைச்சகம்

யூபிஎஸ்சி பணி நியமனம் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியாளர் அமைச்சக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

''கடந்த 2018-19 ஆம் ஆண்டில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விடக் குறைவாக உள்ளது. அதாவது 2,352 பேர் மட்டுமே கடந்த நிதியாண்டில் யூபிஎஸ்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட ஏராளமான குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில், யூபிஎஸ்சி 3,750 தேர்வர்களைப் பரிந்துரை செய்தது. 2016- 17 ஆம் ஆண்டில் 3,020 பேரையும் 2017-18 ஆம் ஆண்டில் 3,083 பேரையும் 2018-19 ஆம் ஆண்டில் 2,352 பேரையும் பரிந்துரைத்தது.

அதே நேரத்தில் 2015-16 ஆம் ஆண்டில், பணி நியமனத்துக்காக 3,750 காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. 2016- 17 ஆம் ஆண்டில் 3,184 பேரையும் 2017-18 ஆம் ஆண்டில் 2,076 பேரையும் 2018-19 ஆம் ஆண்டில் 2,353 பேரையும் அரசு பரிந்துரைத்தது''.

இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

யூபிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள், இந்திய வன சேவை, ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள், ஒருங்கிணைந்த புவி அறிவியலாளர் மற்றும் புவியியலாளர், இந்தியப் பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை மற்றும் பொறியியல் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் உயரதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x