Published : 05 Feb 2020 08:52 AM
Last Updated : 05 Feb 2020 08:52 AM

எதிர்காலத்தில் உலகளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகளவில் 5 பேரில் ஒருவர் தனதுவாழ்நாளில் புற்றுநோயை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச புற்றுநோய் தினம் (பிப்.4)உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட் டது. இந்நிலையில், ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு புற்றுநோய் தொடர்பாக வருடாந்திர ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது :

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகள் தொற்று நோய், புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதிலும், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் தங்களின் குறைவான வளங்களேயே நம்பியுள்ளது.

இதனால், ஏழ்மையான நாடுகளில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்புகளின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் புற்றுநோய் சிகிச்சைக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 25 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தால் 75 லட்சம் மக்களை நோயிலிருந்து காப்பாற்ற முடியும். புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 25 சதவீதம் புகையிலைதான் காரணம்.

உலக அளவில் ஒட்டுமொத்த புற்றுநோயின் விகிதம் 2040-ம் ஆண்டில் 60 சதவீதமாக உயரும். அதேபோல், ஏழ்மையான நாடுகளில் புற்றுநோய் விகிதம் 81 சதவீதமாக உயரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் ரென் மிங்குய் கூறியதாவது: பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் உள்ள நாடுகள் மற்றும் ஏழ்மையான நாடுகளுக்கு இடையே புற்றுநோய் சிகிச்சைக்கான ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக உள்ளன. மக்களுக்கு புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு சரியாக கிடைத்தால், நோயை முன்கூட்டியே கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். புற்றுநோயின் இறுதி இறப்பாகவும், சிகிச்சையின் விலை உயர்ந்ததாகவும் இருக்கக்கூடாது.

நீண்ட காலமாக செல்வ நாடுகளின் நோயாக கருதப்பட்ட புற்றுநோய், இனி அவ்வாறு இருக்காது. உலகளவில் 5 பேரில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். இது உலகளாவிய பெரும் சுமையாகும். இவ்வாறு ரென் தெரிவித்தார்.

புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் எலிசெபத் வீடர்பாஸ் கூறுகையில் “ பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் சிறந்த புற்றுநோய் சிகிச்சையின் விளைவாக 2000-2015-ம்ஆண்டுகளுக்கு இடையே இறப்பு விகிதம் 20 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால் ஏழ்மையான நாடுகளில், இறப்பு விகிதம் 5 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x