Published : 04 Feb 2020 06:26 PM
Last Updated : 04 Feb 2020 06:26 PM
புதுச்சேரி அரசுப் பள்ளியில் நடைபெற்ற சிட்டுக்குருவி திருவிழாவில் குழந்தைகளுக்கு 100 சிட்டுக்குருவி கூண்டுகள் இலவசமாகத் தரப்பட்டன. கிளிகளுக்கான பிரத்யேகக் கூண்டும் இதில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுச்சேரி எக்கோல் ஆங்கிலேஸ் அரசுத் தொடக்கப் பள்ளியில் சிட்டுக்குருவி திருவிழா நடந்தது. இந்நிகழ்வில் பசுமை இயக்கத்தைச் சேர்ந்த அருண், பள்ளி குழந்தைகளுக்கு நூறு சிட்டுக்குருவிக் கூண்டுகளை இலவசமாக வழங்கினார். பச்சைக் கிளி வளர்ப்புக்குப் புதிதாகக் கூண்டும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் பாஸ்கர், எஸ்பி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயற்கையின் மீதான ஆர்வத்தால் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க இலவசக் கூண்டுகளை விநியோகித்து வருகிறார் புதுச்சேரி அருண். இதுவரை தனது சொந்த செலவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூண்டுகள் வரை பலருக்குக் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அருண் கூறுகையில், "தனியார் கிளினிக்கில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறேன். வீட்டில் பறவைகளுக்குத் தானியமும், தண்ணீரும் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். இப்போதெல்லாம் சிட்டுக் குருவியைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்காக சிறிய கூண்டுகளைத் தயாரித்து விநியோகிக்கத் தொடங்கினேன். ஆறு ஆண்டுகளுக்கு மேலாகக் கூண்டுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். வீடுகளில், கடைகளில் சிட்டுக் குருவிக்காகக் கூண்டு வைக்க விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்கின்றனர்.
இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கூண்டுகளைத் தயாரித்து அளித்துள்ளேன். ஒரு கூண்டு செய்ய ரூ.100 வரை செலவாகும். எனது சொந்தப் பணத்தைச் சேமித்துதான் கூண்டுகளை மொத்தமாகத் தயாரித்து வைத்து விநியோகித்து வருகிறேன். தற்போது கிளிகளுக்காக புதிய கூண்டையும் வடிவமைத்து குழந்தைகள் மூலம் அறிமுகம் செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT