Published : 04 Feb 2020 09:08 AM
Last Updated : 04 Feb 2020 09:08 AM

ஆய்வறிக்கை தயாரிப்பு போட்டியில் 5 பாடப்பிரிவுகளில் கோவை அரசு பள்ளிகள் முதலிடம்

இம்பார்ட் திட்டத்தில் ஆய்வறிக்கை தயாரிப்பு போட்டியில், 5 பாடப்பிரிவுகளில் கோவை அரசு பள்ளிகள் முதலிடத்தைப் பிடித்தன.

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து, பள்ளி வருகைப்பதிவை உயர்த்தும் 'இம்பார்ட்'திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் கோவை மாவட்டத்தில் 100 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும் போட்டி, கோவை கல்வி மாவட்டத்தில் துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பேரூர் கல்வி மாவட்டத்தில் ஒத்தகால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளியிலும், பொள்ளாச்சிகல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

இதில் தலா ஒரு பள்ளியில் இருந்து 5 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 6 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் 5 பாடப்பிரிவுகளில் இருந்து 500 ஆய்வறிக்கைகள் வட்டார அளவில் பெறப்பட்டன. அவற்றில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் 3 பரிசுகளைப் பெற்றவர்கள் விவரம்:

தமிழ் பாடத்தில் மத்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், ராஜவீதி துணிவணிகர் சங்க அரசுமேல்நிலைப் பள்ளி 2-வது இடமும்,பேட்டநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி 3-வது இடமும் பெற்றன.ஆங்கிலப் பாடத்தில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி 2-ம் இடத்தையும், ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.

கணிதப் பாடத்தில் ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி 2-வது இடத்தையும், ஒத்தகால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி 3-வது இடத்தையும் கைப்பற்றின. அறிவியல் பாடத்தில் அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், முத்திபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 2-வது இடத்தையும், ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன. சமூக அறிவியல் பாடத்தில் சின்ன தடாகம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி நகரவை மேல்நிலைப் பள்ளி 2-ம் இடமும், ஒண்டிபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி 3-ம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் பெ.அய்யண்ணன் பரிசுகள்வழங்கினார். இவ்விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் கே.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதலிடம் பெற்ற வர்கள் பிப். 6-ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான ஆய்வறிக்கை தயாரிப்பு போட்டியில் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x