Published : 03 Feb 2020 09:11 AM
Last Updated : 03 Feb 2020 09:11 AM

இஸ்ரோவில் மே மாதம் விண்வெளி ஆய்வுப் பயிற்சி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை

இளம் விஞ்ஞானி திட்டத்தின்கீழ் விண்வெளி ஆய்வுப் பயிற்சி பெற பள்ளி மாணவர்கள் இன்று முதல் (பிப்.3) விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சி களும் அளிக்கப்படும்.

இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோவின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தற்போது பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக இன்று (பிப்.3) முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதில் தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் மார்ச் 2-ல் வெளியிடப்படும். அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பின்னர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 080 2217 2269 தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x