Published : 01 Feb 2020 10:19 AM
Last Updated : 01 Feb 2020 10:19 AM
பிப்.10-ம் தேதி முதல் குரூப்-2 கலந்தாய்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 23 துறைகளில் காலியாக இருந்த 1,338 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான குரூப்-2 தேர்வு இரண்டு நிலைத் தேர்வுகளாக நடைபெற்றது. முதல் நிலைத் தேர்வு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இதில் 14,797 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி நடந்து முடிந்தது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரம் கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் 2,667 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
அவர்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT