Published : 31 Jan 2020 11:23 AM
Last Updated : 31 Jan 2020 11:23 AM

அறம் செய்யப் பழகு 11: பெண் விடுதலைக்கு என்ன தேவை?

பிரியசகி

சுதாகர்: தாய்வழிச் சமூகம்னா என்ன தாத்தா?

தன்ராஜ்: ஆதிகாலத்துல மனிதன் குகையில் வாழ்ந்தபோது மனித குழுக்களுக்கு பெண்தான் தலைமை தாங்கினாள்னு மனித இனம் குறித்து வரலாற்று நூல்கள் சொல்கின்றன. 1861-ல் ஜோஹன் ஜாகோப் எழுதிய மதர்ஸ் ரைட் என்ற நூலும் 1877-ல் லூயிஸ் மார்கன் எழுதிய பண்டைய சமுதாயங்கள் என்ற நூலும் தாய்வழிச் சமூகம் குறித்த ஆய்வுகள் நடக்க முக்கிய காரணமாக இருந்தவை.

ராணி: ஆமாம் நானும் சில புத்தகங்களில் படிச்சிருக்கேன். போர் தளபதி, சமயத் தலைவர்கள், பூசாரி, வேட்டைக்கு தலைமை ஏற்பது எல்லாமே அந்த காலத்துல பெண்கள்தான். ஏன் தெய்வங்களாக பெண் தெய்வங்களை மட்டும்தான் வழிபட்டிருக்காங்க. தமிழரின் பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தில் பெண் தெய்வமான கொற்றவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்ராஜ்: கார்ல் மார்க்சின் தோழர் பிர்டெரிக் ஏங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற தம் நூலில் மனிதர்கள் நாடோடிக் குழுக்களாக வாழத் தொடங்கியபோது, அந்தச் சமூகம் சமத்துவமானதாக இருந்ததாகக் கூறுகிறார்.

ஆண்களும், பெண்களும் தங்களுக்கான வேலைகளை நடைமுறைக்கு எளிதான விதத்தில் பிரித்துக் கொண்டனர். நிறைய குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் எல்லோருக்கும் பொதுவானதாக பயன்படுத்தப்பட்டன. அங்கு பெண் சக்தி வாய்ந்தவளாக இருந்தாள். தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருந்தது.

கீர்த்தி: இப்படி இருந்த பெண்களோட நிலைமை எப்படி தாத்தா மாறிச்சு?

தனராஜ்: நாடோடி வாழ்க்கை மறைஞ்சு ஆற்றங்கரைகளில் வாழ ஆரம்பித்த பிறகு மனுஷன் விவசாயம் செய்ய ஆரம்பிச்சான். ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கவும் செய்தான். அன்றாடத் தேவைக்கு அதிகமாய் இருந்த பொருட்களை என்றைக்கு சேர்த்து வைக்க ஆரம்பிச்சானோ அன்னைக்கே மனுஷன் சுயநலவாதியா மாற ஆரம்பிச்சுட்டான்.

அதிகமான பொருள் வைத்திருப்பவர்கள், குறைவான பொருள் வைத்திருப்பவர்கள் என இரு குழுக்களாக பிளவு ஏற்பட்டு எஜமானர்கள், அடிமைகள் என்ற பாகுபாடு ஏற்பட்டது, இந்த கால கட்டத்தில்தான் சொத்து சேகரிக்கும் ஆணுக்கு முக்கியத்துவம் தரப்பட்டும், வீட்டை நிர்வகிக்கும் பெண்ணுக்கு முக்கியத்துவம் குறைந்து அடிமையாகக் கருதப்படும் நிலையும் ஏற்பட்டது.

பெண் ஆணின் சொத்தாக மாறியதையும், தாய் வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறியதையும் பெண்குல வரலாற்றின் மாபெரும் தோல்வி என்கிறார் ஏங்கெல்ஸ்.

ராணி: இந்த பெண் அடிமைத்தனம் சமுதாயத்தில் இருந்து நீங்குவதற்கு பாரதியார், சாவித்திரி பூலே, தந்தை பெரியார் போன்றவங்க ரொம்பவே பாடுபட்டாங்க. பெண்களுக்கு கல்வி, பொருளாதார சுதந்திரம் இது இரண்டும் கிடைக்கணும். அப்பதான் மத்தவங்களை சார்ந்து வாழாம தன் காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு வரும்.

சுதாகர்: அப்ப படிப்பும், வேலையும் கி்டைச்சுட்டா எல்லா பெண்களோட நிலையும் மாறிடுமா அம்மா?

ராணி: அப்படியும் சொல்லிட முடியா

துப்பா. நல்லா படிச்சு, டீச்சரா என் கூட வேலை பாக்குற சில பெண்கள் வாங்குற சம்பளத்த அப்படியே அவங்க கணவர்கிட்ட குடுத்துட்டு பஸ் டிக்கெட்டுக்குக் கூட அவர் கைய எதிர்பார்க்குற நிலைலதான் இருக்காங்க. கணவன் என்னதான் குடிகாரனா அடிச்சு, உதைச்சு கொடுமைப்படுத்தினாலும் குழந்தைகளுக்காக பொறுத்துக்கிட்டு நரகத்துல வாழும் படிச்ச பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க.

கீர்த்தி: அப்ப இதுக்கு என்னதான் தீர்வு?

தனராஜ்: சின்ன வயசிலிருந்தே பெண் குழந்தைகளை தைரியமானவர்களா, அவர்களுடைய உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்களா, நாட்டு நடப்பு பற்றி தெரிந்தவர்களா, பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து அறிவுடையவர்களா வளர்க்கணும். அதே சமயம் பெண்களை உயிரும், உணர்வும் உள்ள சகஜீவனா மதிக்கக் கூடியவர்களா ஆண் குழந்தைகளை வளா்க்கணும்.

வீட்டிலிருக்கும் அம்மாவையும், சகோதரிகளையும் மதிச்சு, அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது தானா முன்வந்து உதவி செய்யக் கூடிய ஒரு ஆண் கண்டிப்பா தன் மனைவியையும் மதிக்கக் கூடியவனா இருப்பான்.

அந்த குடும்பத்துல ஆணாதிக்கம் என்பதோ பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதோ இருக்காது. அத்தகைய குடும்பத்திலிருந்து வரும் ஆண் சமூகத்திலிருக்கும் மற்ற பெண்களையும் அதே கண்ணோட்டத்தோட பார்ப்பதால் பாலியல் குற்றங்களும், வன்கொடுமைகளும் இருக்காது.

கீர்த்தி: அப்படி ஒரு சமுதாயம் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும் இல்ல தாத்தா!

(தொடரும்)
கட்டுரையாளர்: ஆசிரியை, எழுத்தாளர், நிறைவகம், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x