Published : 31 Jan 2020 07:07 AM
Last Updated : 31 Jan 2020 07:07 AM
பத்தாம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வு பிப்ரவரி 21-ம்தேதி தொடங்கும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 9.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைதேர்வுக்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வை பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதில் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்கள் பிப்.25-ம் தேதி தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்படும்.
அதன்பின் தனித்தேர்வர்களுக்கு பிப்.26 முதல் 28-ம் தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிந்தபின் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை மார்ச்5-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், எந்த புகாருக்கும் இடம்அளிக்காமல் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செய்முறை தேர்வை நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரியஅறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT