Published : 30 Jan 2020 05:35 PM
Last Updated : 30 Jan 2020 05:35 PM
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தரத் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் தரகர்களாகச் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குரூப்-4 தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறும்போது, ''குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது. தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம். 9,300 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி விட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT