Published : 30 Jan 2020 08:36 AM
Last Updated : 30 Jan 2020 08:36 AM
தங்கள் நாட்டில் அகதிகளாக இருக்கும் ரோஹிங்கியா குழந்தைகளுக்கு கல்வி வழங்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.
மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் ரோஹிங்கியா முஸ்லீம் இனமக்கள்அதிகமாக வசித்து வந்தனர். இந்நிலையில், 2017-ம் ஆண்டில், மியான்மர் அரசின் ராணுவ நடவடிக்கையால், 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் அடித்து விரட்டப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் வங்கதேசத்தில் தஞ்சமடைந்ததால், அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில், சுமார் 5 லட்சம் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு அகதிகள் முகாமில் கல்விக்கான எந்த வசதியும் இல்லாததால், ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தற்காலிகமாக பள்ளிகள் அமைத்து கல்வி வழங்கி வந்தது.
இந்நிலையில், அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்க தேவையான நடவடிக்கையை வங்கதேச அரசு மேற்கொள்ளும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மூமென் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ ரோஹிங்கியாவின் ஒரு தலைமுறையை கல்வி அறிவு இல்லாமல் செய்ய நாங்கள் தயாராக இல்லை. எனவே, அகதி முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு மியான்மர் வரலாறு, கலாச்சாரத்தின் படியே 14 வயது வரை கல்வி வழங்கப்படும்.
மேலும் திறன் பயிற்சியும் அளிக்கப்படும். இதனால் ரோஹிங்கியா மக்கள் மியான்மர் நாடுக்கு திரும்பும்போது வசதியாக இருக்கும்” என்றார்.
வங்கதேசத்தின் இந்த முடிவுக்கு ஐ.நா உள்ளிட்ட பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ரோஹிங்கியா மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மியான்மர் அரசு எடுக்க வேண்டும் ஐ.நா நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT