Published : 29 Jan 2020 04:06 PM
Last Updated : 29 Jan 2020 04:06 PM
தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவர்களுக்கு 16 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 57-வது தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தன. இதில் புதுச்சேரியிலிருந்து 72 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பத்து ஸ்கேட்டிங் வீரர்கள் தேசிய அளவில் மொத்தம் 16 பதக்கங்களை வென்றனர். இதில் 4 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கும்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி திரும்பிய குழந்தைகள், முதல்வர் நாராயணசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
போட்டி தொடர்பாக ரோலர் ஸ்கேட்டிங் சங்கப் பொதுச் செயலர் பிரசாத் கூறுகையில், "மொத்தம் 16 பதக்கங்கள் வென்றோம். பேட்ரிக் பள்ளியில் படிக்கும் சாய் பிரணீதா 3 தங்கப் பதக்கங்களை (ரிங், ரோடு போட்டிகள்) வென்றார். அதேபோல் அமலோற்பவம் பள்ளியில் படிக்கும் சாரதி என்னும் மாணவர், கிளாசிக் பிரிவில் தங்கத்தையும், ஸ்பீடு போட்டியில் வெள்ளியும் வென்றார்.
மெர்லின் தனம் அற்புதம், பியூசா தாரிணி ஆகியோர் தலா இரு வெள்ளிப் பதக்கங்களும், கிரிதாசன் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலமும் வென்றனர். ஹெர்சிதா, மோகன் பாலாஜி, ஜெயசித்ரா ஆகியோர் தலா ஒரு வெள்ளியும், ஹரிபிரசாத், தமிழ்செல்வம் ஆகியோர் தலா ஒரு வெண்கலமும் வென்றனர். தேசியப் போட்டிகளில் புதுச்சேரி குழந்தைகள் மீண்டும் சாதனை படைத்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.
தேசிய அளவிலான போட்டிகளில் 3-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்போர் வரை கலந்து கொண்டனர். பதக்கங்களை 3-ம் வகுப்பு குழந்தைகள் தொடங்கி 9-ம் வகுப்பு வரை படிப்போர் வென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT