Published : 29 Jan 2020 02:08 PM
Last Updated : 29 Jan 2020 02:08 PM
இனி சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியர்கள் பணிபுரியலாம் என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகவலை முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நம்முடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை எண்ணிப் பெருமை கொள்கிறேன். ஆசிரியர்கள் நம் பிரதான பாதுகாவலர்கள். நம்முடைய சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுப்பவர்கள். மாணவர்களை நாளைய நிஜத் தலைவர்களாக உருமாற்றி, தேசத்தை வளர்த்தெடுப்பவர்கள்.
நம்முடைய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, மேற்கு வங்க அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணிபுரிவதற்கு ஏற்ப, அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவின் மூலம் ஆசிரியர்கள் தங்களின் சொந்தக் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள முடியும். அமைதியான மனதுடன் பணியாற்ற முடியும். தேசத்தைக் கட்டமைப்பதில் தங்களது பங்களிப்பை முழு ஈடுபாட்டுடன் அளிக்க முடியும். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT