Published : 29 Jan 2020 09:00 AM
Last Updated : 29 Jan 2020 09:00 AM

தலைக்கவசம் அணியுங்கள்: வாகன ஓட்டிகளுக்கு பள்ளி மாணவிகள் அறிவுரை

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு பூ கொடுத்து அறிவுரை கூறிய பள்ளி மாணவிகள்.

திருப்பூர்

திருப்பூரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பூ வழங்கி, தலைக்கவசம் அணியுமாறு பள்ளி மாணவிகள் அறிவுரை கூறினர்.

31-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, மாநகர காவல் துறைசார்பில் திருப்பூரில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகர காவல் துணை ஆணையர் வி.பத்ரி நாராயணன் பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர். வடக்கு உதவி ஆணையர் வெற்றிவேந்தன், போக்குவரத்து உதவி ஆணையர் கஜேந்திரன், வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து புஷ்பா தியேட்டர் சந்திப்பில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு, வாகனம் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து விளக்கப்பட்டது. “அலைபேசிகள் பேசியவாறு வாகனங்களை இயக்க கூடாது, இருசக்கர வாகனத்தை இயக்குவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்த கார் ஓட்டுநர்களுக்கு பள்ளி மாணவிகள் மூலம் பூக்கள் கொடுத்து சாலை விதிகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x