Published : 29 Jan 2020 08:07 AM
Last Updated : 29 Jan 2020 08:07 AM

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள் அறிவிப்பு: விமான சுற்றுலா செல்ல வாய்ப்பு

சென்னை

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ்ப் பற்றை வளர்க்கும் வகையில், கலை இலக்கிய போட்டிகளை சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் முன்னாள்மாணவர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்களின் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு பலனளிக்கும் வகையில் ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தலைமை அதிகாரிகள் என 5,200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் தமிழ்ப் பற்றை வளர்க்கும் வகையில் 'கலைக்களம்' என்ற பெயரில் கலை இலக்கியப் போட்டிகளை அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அளவில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, நாட்டுப்புற இசை மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 8 மண்டலங்களில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றும் வகையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிப்ரவரி 2-ம் தேதி முதல் இந்த போட்டிகள் தொடங்குகின்றன.

சென்னை மண்டலத்துக்கான முதல் கட்ட போட்டிகள் பிப். 2-ம்தேதி, சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் நடக்கின்றன. மாநில அளவிலான இறுதி போட்டிகள்ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 23-ம் தேதி நடக்கின்றன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.irttalumni.org என்ற இணையதளத்தில் உள்ள ‘கலைக்களம்’ எனும் பகுதியில் பதிவு செய்யலாம். மேலும், இந்தப் போட்டிகள் தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற 95005 50650 என்ற செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக வெளிநாட்டு விமான சுற்றுலாவுடன், ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்கு உள்நாட்டு விமான சுற்றுலாவுடன் ரூ.5,000, ரூ.2,500 என பரிசுகள் வழங்கப்படும். மற்ற அனைத்து போட்டிகளிலும் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசாக, உள்நாட்டு விமான சுற்றுலாவுடன், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இத்தகவலை சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x