Published : 28 Jan 2020 01:27 PM
Last Updated : 28 Jan 2020 01:27 PM

'ஸ்கூல் போக பஸ் இல்லாம கஷ்டப்படறோம்'- வைரலாகும் பள்ளி மாணவி வீடியோ

'பஸ் இல்லாம கஷ்டப்படறதால ஸ்கூல் போக முடியலை என்று கூறி பள்ளி மாணவி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டீஸ்வரி தலைமையில் கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆரப்பள்ளம், பூசாரிப்பட்டி, பெருமாள் பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட தங்களின் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராம சபைக் கூட்டத்தில் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி சஹானாவும் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், ''எங்க மீனாட்சிபுரம், அதோட சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மாயாண்டிபட்டில இருக்கற அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறோம். 7 கிமீ தூரத்துல உள்ள பள்ளிக்குப் போக அரசு பஸ் வசதியில்லை. இதனால ரொம்பக் கஷ்டப்படறோம். நடந்தே ஸ்கூல் போக வேண்டியிருக்கு. ஒத்தையடிப் பாதைல டாஸ்மாக் வேற இருக்கு. எங்களுக்கு உடனடியாக பஸ் வசதி ஏற்பாடு செஞ்சு கொடுங்க'' என்றார்.

சஹானாவின் பேச்சு அங்கு வந்திருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் துணிச்சலாகப் பேசிய மாணவி சஹானாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x